இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும் மற்றும் அவற்றை அரசுடமையாக்குவதற்குமான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் நேற்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நடவடிக்கைகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த மற்றும் நடப்பு ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் 354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் ஒரு கோடியே நூற்று ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 150 பவுன் தங்கம், 64 வாகனங்கள், 6 கோடி ரூபா பணம் மற்றும் 61 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசுடமையாக்குவதற்காகத் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், இந்த ஆண்டில் (2025) இதுவரை 204 பவுன் தங்கம், 13 வாகனங்கள், 67 கோடியே 78 இலட்சம் ரூபா பெறுமதியான காணி மற்றும் ஏனைய சொத்துக்கள் மற்றும் 18 வீடுகள் எனச் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

