தற்போது பாகிஸ்தானில் முத்தரப்புத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த சுற்றுப் பயணத்திற்கான பணம் மற்றும் போட்டிக் கட்டணங்களை நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளது.
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்கள் நாட்டில் நிலவும் பேரழிவு வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள சக இலங்கையர்களின் நிலைமை எங்களை வீரர்களாகவும் ஆதரவு குழுவினரையும் மிகுந்த வருத்தமடையச் செய்துள்ளது.
ஒரு அணியாக, எங்கள் மனமும் எண்ணங்களும் உங்களுடன் இணைந்துள்ளன.
பாகிஸ்தான் தொடருக்கான சுற்றுப்பயணத் தொகையும் போட்டிக் கட்டணங்களையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளோம்.
நாங்கள் நாட்டிற்கு திரும்பிய பின்பும் மேலும் உதவி வழங்குவோம்.
இந்த கடினமான நேரத்தில் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள், ஒருவருக்கொருவர் கவனம் செலுத்துங்கள்.
எல்லா இலங்கையர்களுடனும் நாங்கள் ஒற்றுமையாக நிற்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

