Courtesy: Sivaa Mayuri
2009இல் முடிவடைந்த உள்நாட்டு மோதலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும், இலங்கை ஏற்றுக்கொள்ளாது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ( Ali Sabry) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், மேற்குலக நாடுகள் தமது நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர்களின் வாக்குகளை பெறும் நோக்கில், இலங்கை மீதான தமது வெளிநாட்டுக் கொள்கைகளை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்
2022ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு, இந்த தீர்மானத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கான அமர்வில் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். ஏற்கனவே அந்த தீர்மானத்தை, இலங்கை நிராகரித்துள்ளது.
தற்போதைய தீர்மானத்திற்கான காலம் முடிவடைவதால், அதைத் தொடர புதிய தீர்மானத்தை, பேரவையில் அறிமுகப்படுத்த வேண்டும்.
எனினும் அதற்கேற்ப பதிலளிக்க இலங்கை தயாராகி வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
குறிப்பாக, இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வெளிநாட்டில் நீதிமன்ற வழக்கைத் தொடங்குவதற்கான முன்மொழிவுடன் அரசாங்கம் முற்றிலும் உடன்படவில்லை.
இது, இலங்கையின் இறையாண்மைக்கும், சட்ட அமைப்பின் இறையாண்மைக்கும் எதிரானது. அத்துடன் இலங்கையின் நீதித்துறை அத்தகைய தலையீட்டை அனுமதிக்காது என்று வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
பொருளாதார விடயங்கள்
இதேவேளை, 15 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த மோதலுக்கு தீர்வு காண்பதற்கு உள்ளக நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், சமூகங்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்த வெளிச்சக்திகள் முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு பொருளாதாரம் பற்றி என்ன தெரியும்? பொருளாதார விடயங்களில் நிபுணர்களான சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி, அமெரிக்க கருவூலம் மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்துடன் இலங்கை பொருளாதார விடயங்களை கையாண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், மனித உரிமைகள் பேரவை அதன் எல்லைக்குள் இருந்தால், அந்த பேரவையுடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.