இ-கடவுச்சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறியுள்ளார்.
அதன்படி, இ-கடவுச்சீட்டு வழங்கும் பணியை சுமார் 8 மாதங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடவுச்சீட்டு இறக்குமதி
தற்போது கடவுச்சீட்டு வழங்குவது வழக்கமான நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், 1 மில்லியன் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை நாட்டிற்கு இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் முறைமை தொடர்பாக 186 குடிவரவு அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
ஆட்சேர்ப்பு
அதன் அடிப்படையில், பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொருத்தமான பரீட்சையை நடத்துவதற்கான திகதியை வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த திகதி கிடைத்த பிறகு அதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தற்காலிக அடிப்படையில் 14 உதவி கட்டுப்பாட்டாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக பொது சேவை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியல் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.