பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) இரங்கல்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பி வைத்துள்ள இரங்கற் குறிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவு,
உலகவாழ் மக்கள் ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
கத்தோலிக்க மக்களின் திருத்தந்தை என்ற அடையாளத்தினூடே, தனது திருச்சபை
மக்களைக் கடந்து மனுக்குலத்தின் மாட்சிமைக்கான அவரது எண்ணங்களின் மகத்துவத்தை,
கொரோனாப் பெருந்தொற்று காலத்தில் அவர் ஆற்றிய மறையுரையின் சாரத்தில் நாம்
அறிந்துகொள்ள முடியும்.
இரங்கல்
கருணையையும், மனிதநேயத்தையும், சமாதானத்தையும் விரும்பிய இந்த யுகத்தின்
பேரடையாளமாக மறைந்த திருத்தந்தையின் காலமும், பணிகளும் இருந்திருக்கின்றன.
2013ஆம் ஆண்டு, ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்களின் பங்கேற்போடு நடைபெற்ற மறைந்த
திருத்தந்தை பிரான்சிஸ் அடிகளாரின் தலைமைப் பணி ஏற்புத் திருப்பலியில்
‘உலகத்தில் பொருளாதாரத் துறை, அரசியல் துறை, சமூகத் துறை ஆகியவற்றில்
பொறுப்பான பதவியில் இருப்போர் அனைவரும் கடவுளின் படைப்புலகு குறித்து அக்கறை
கொண்டிருக்க வேண்டும்.
உலகத் தலைவர்கள் சுற்றுச்சூழலையும், குழந்தைகளையும்,
முதியோர்களையும், துன்பத்தில் உழல்வோரையும் பாதுகாக்கக் கடமை கொண்டுள்ளார்கள்’
என்றுரைத்த அவரது வார்த்தைகள் உலகை வழிநடத்தும் பரிவும், பக்குவமும்
அவருக்கிருப்பதை அடையாளப்படுத்திற்று.
மதங்களைக் கடந்த மனிதநேயத்தின் அடையாளமாக, சமாதானத்தின் தூதுவனாக இறைபணி
ஆற்றிய கத்தோலிக்க திருச்சபையின் திருந்தந்தை பிரான்சிஸ் அடிகளாரின் மறைவின்
துயர்சுமந்த எமது மக்களோடு நானும் இணைந்திருக்கிறேன் என்றுள்ளது.
இதேவேளை, மறைந்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு யாழ்.மறை மாவட்ட
குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.