இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு அடுத்த மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (08) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”தற்போது சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலைகளை நடத்திச் செல்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது.
பொருளாதார நெருக்கடி
கடந்த காலங்களில், ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படாமையும், நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பல வைத்தியர்கள் வெளிநாடு சென்றமையுமே இதற்கு வழிவகுத்த பிரதான காரணங்களாகும்.
சுகாதார சேவையைச் சிக்கல் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கு சுமார் 2,800 விசேட வைத்தியர்கள் தேவைப்படுக்கின்ற போதிலும் நாட்டில் தற்போது 2,000 விசேட வைத்தியர்களே உள்ளனர்.
அத்துடன், 20,000 வைத்தியர்கள் தேவையாக உள்ள போதிலும், நாட்டில் தற்போது, சுமார் 17,000 வைத்தியர்களே உள்ளனர்.
சுகாதார பணியாளர்கள்
இந்த நிலையில் சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அடுத்த மாதத்திற்குள் 3,500 தாதியர்களையும் 976 குடும்பநல சுகாதார சேவை அதிகாரிகள் உள்ளிட்ட அவசியமான பல சுகாதார பணியாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதேநேரம், கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறிய விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சகல வைத்தியர்களும் மீண்டும் நாடு திரும்ப வேண்டும், அவர்களது சேவை நாட்டுக்கு அவசியமாகின்றது“ என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.