“தமிழகத் தொப்புள் கொடி உறவுகள், வடக்கில் பேரிடரால் பாதிப்புற்றோருக்கு
அனர்த்த நிவாரண உதவிப் பொருள்களை நேரடியாக எடுத்து வருவதற்கான
அனுமதியை வழங்க அரசாங்கம் முன் வர வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை
விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தப் பேரிடரில் பாதித்த மக்களுக்கு
தொப்புள்கொடி உறவுகள் பல நேரடியாக இங்கு வந்து உதவத் தயார் நிலையில் உள்ளனர்
என்று எமக்குத் தகவல்கள் கிட்டுகின்றன.
இருந்தபோதும் அதற்கான ஏற்பாடுகளில்
பெரும் நெருக்கடி காணப்படுகின்றது.
அரசாங்கம் நடவடிக்கை
எனவே இந்தப் பொருள்களை நேரடியாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்குக்
கடல் வழியாகவும், பலாலி விமான நிலையத்துக்கு வான் வழியாகவும் எடுத்து வந்து
பாதிப்புற்றோருக்கு அவர்களே நேரடியாக வியோகிப்பதற்கான அனுமதியையும் வழங்க
அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரிடர் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு இதற்கான
பரிந்துரையை வழங்கி இந்திய ட்ரோலர் படகுகளில் பொருள்களை ஏற்றிவர அனுமதி
வழங்கினால் பல உதவிகளை வழங்க விருப்பம் கொண்டுள்ள எமது தமிழக உறவுகள் அதனை
உடனடியாகச் செய்வார்கள்.
மன்னாரில் சோதனை நடவடிக்கைகள், சுங்க நடவடிக்கைகளில் இடையூறு இருப்பதாகக்
கருதினால் காங்கேசன்துறை துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்கனவே இருப்பதனால்
அனுமதியை வழங்குவதில் எந்தத் தடையும் இருக்க முடியாது எனக் கருதுகின்றோம்.
கோரிக்கை
ஏனெனில் அன்பளிப்பாக வழங்க முன் வருவோர், அந்த நிவாரணப் பொருள்களின் விலையை
விட போக்குவரத்துச் செலவே அதிகமாக ஏற்படும் எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டும் காங்கேசன்துறை துறைமுகத்தின் வசதி கருதியும்
ட்ரோலர் படகுகளிலும் விசேட விமானங்களிலும் பொருள்களை எடுத்து வந்து
விநியோகிக்க அனுமதியை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கினால் தமிழக உறவுகளுடன் தொடர்புகொண்டு இன்னும் அதிக உதவிகளை
எம்மால் பெற்றுத்தர முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

