யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, கிளிநொச்சி (Kilinochchi) – தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (24.02.2025) அதிகாலை கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ”வடமராட்சிப் பகுதியில் இருந்து இன்று அதிகாலை கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடைமறிக்கப்பட்டது.
இந்த நிலையில், காவல்துறையினர் வாகனத்தை சோதனையிட்ட போது 150 இற்கு மேற்பட்ட கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதோடு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 350 கிலோவுக்கு மேற்பட்ட நிறையுடைய கஞ்சா மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவை கிளிநொச்சி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.