புதிய இணைப்பு
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இதன்போது, வேலன் சுவாமிகள், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர், மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அரசியல் வாதிகள், பொது மக்கள், காணி உரிமையாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக வலி.வடக்குபிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதொரு சட்டவிரோதமான விகாரை
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர சிறி கல்யான வம்ச குழுவின் வட இலங்கை
துணை தலைமை சங்கநாயக பதவிக்கான சிறி சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி
தலைமையில் நடைபெற உள்ளது.

இதேவேளை எதிர்வரும் தைமாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ ராஜ மகா விகாரையில் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், அதற்கான பாதுகாப்புஅனுமதி கோரி பாதுகாப்பு தரப்பினருக்கு மகா சங்கத்தினரால் எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
மேலும், தையிட்டி விகாரைக்கு முன்பாக ‘இதொரு சட்டவிரோதமான விகாரை” என மும்மொழிகளில் அறிவித்தல் பலகை நாட்டுவது எனவும் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுப்பது என்றும் கடந்த வியாழக்கிழமை வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

