நுவரெலியாவில் (Nuwara Eliya) இடம்பெற்ற ஜனாதிபதி நிதிய நிகழ்வில் “ஜனாதிபதி” என்பதற்கு பதிலாக “ஐனாதிபதி” என குறிப்பிடப்பட்டிருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பிலான பிரச்சினை முடிவின்றி இன்றும் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக அண்மைக் காலமாக அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வீதி சமிக்ஞைகள், பெயர் பலகைகள் என அனைத்து இடங்களிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
பொறுப்பற்ற அதிகாரி
நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில் ஜனாதிபதி நிதியத்தால் புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (16.7.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையில் ‘ஜனாதிபதி’ என்பதற்கு பதிலாக ‘ஐனாதிபதி’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக அங்கிருந்த ஒரு அரச அதிகாரியிடம் தெரிவித்த பொழுது அவர் சிங்களத்தில் சரியாக இருக்கின்றது தானே என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறியுள்ளார்.
நாட்டின் தலைவராக இருக்கின்ற ஜனாதிபதியின் நிகழ்வுகளில் இப்படி நடைபெறுவதாக இருந்தால் ‘இனி எங்கு போய் முறையிடுவது என்பது நிகழ்வில் கலந்து கொண்ட பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் கேள்வியாக இருந்துள்ளது.
இது அதிகாரிகளின் அசமந்த போக்கா? அல்லது திட்டமிட்ட செயற்பாடா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மத்திய மாகாண ஆளுநர் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் தமிழ் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது முக்கிய விடயம்.