மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இன்று வரை மலசலகூடம், கிணறு மற்றும் மின்சாரம் இன்றி
பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் 30 குடும்பங்கள் வாழ்ந்து வரும் பாலமீன்மடு
மீனவகிராத்தைச் சேர்ந்த மக்களின் அவல நிலை குறித்து அரசியல்வாதிகள் தொடக்கம் அரச
அதிகாரிகள்வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, பற்றைக்காடுகளில் மலசலம் கழிக்க செல்லும் பெண்களை காணொளி எடுத்து முகநூலில் பதிவிட்டு
அச்சுறுத்துவதாக பெண்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மட்டு நகரில் இருந்து பார்வீதி ஊடாக முகத்துவாரம் வெளிச்ச
வீட்டுக்கு அண்மித்த பகுதியில் சுமார் ஐந்து கிலோமீற்றர் தூரத்தில்
கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பாலை மீன்மடு கடற்றொழிலாளர் கிராமத்தில் குறித்த சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கிராமத்தில் சுமார் 130
குடும்பங்கள் வாழ்ந்துவந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி
ஏற்பட்ட சுனாமி அனர்த்தால் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு பல உயிர்கள் காவு
கொண்டது.
இந்தநிலையில், இவர்களுக்காக சுவிஸ் கிராமத்தில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டு
வழங்கப்பட்ட போதும் சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணம் ஆகிய காரணத்தால்
பெற்றோர்கள் அங்கிருக்க முடியாமல் வெளியேற வேண்டிய துர்பாக்கிய நிலமை
ஏற்பட்டது.
அத்தோடு, சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணமாகி பெற்றோருடன் இருக்க
முடியாமல் வெளியேற வேண்டிய சூழலில் தாங்கள் இருந்த கடற்றொழிலாளர் கிராமத்தில் சென்று
குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில், அங்கு ஓலைக்குடிசைகளை அமைத்து குடியேறியவர்களை வெளியேறுமாறும் அரச
காணி என பிரதேச செயலகம் அறிவித்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தனர்.
இருந்த போதும் அவர்கள் எங்கும் செல்லமுடியாதால் தொடர்ந்து அங்கு குடிநீர் கிணறு
மற்றும் மலசல கூடம் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி
வாழந்து வருகின்றனர்.
இவ்வாறு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் வாழந்து வரும் அந்த மக்களுக்கு கடந்த
15 வருடத்துக்கு மேலாக காணிக்கான பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது.
அதே நேரத்தில்
அந்த கிராமத்துக்கு அருகிலுள்ள அரசகாணிகளை ஐந்து ஏக்கர் தொடக்கம் 50 ஏக்கர்வரை
அந்த பகுதியை சேராத செல்வந்தர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் பலர்
அத்து மீறி ஏக்கர் கணக்கில் காணிகளை ஆக்கிரமித்து வருகின்றனர்.
இவர்களுக்கு
எதிராக பிரதேச செயலகம் சட்ட நடவடிக்கை எடுக்காது வீடு இன்றிய ஏழை மக்கள் தமது
பூர்வீக காணியில் குடியேறியதை அரச அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்துவரும் அந்த மக்கள் நிம்மதியாக மலம்கழிக்க கூட
செல்லமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்
குறியாகியுள்ளது.
இந்த நவீன நூற்றாண்டில் ஒரு மாகநர எல்லைக்குள் இன்றுவ ரை
மலசல கூடம் குடிநீர் மின்சாம் இன்றி வாழந்து வரும் மக்களின் அவல நிலையை யார்
தீர்க்கப் போகின்றனர் ?