கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரை சென்ற முச்சக்கரவண்டியில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர்களை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, வட்டவளை காவல்துறையினரால் இன்று (13) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணை
25 மற்றும் 27 வயதுடைய வெலிமடை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மருதானை பகுதியில் வாடகை முச்சக்கரவண்டிகள் ஓட்டுபவர்கள் என தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேகநபர்கள், ஈசி கேஸ் முறையில் பணத்தை பெற்றுக்கொண்டு, வீதிகளில் அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் போதைப்பொருளை வைத்துவிட்டுச் செல்கின்றனர் என வட்டவளை காவல்துறையினர் முன்னெடுத்த ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறிப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
மருதானையில் இருந்து வெலிமடை நோக்கி இவர்கள் முச்சக்கரவண்டியில் இன்று (13) பயணித்துக்கொண்டிருந்தபோது, காவல்நிலையத்திற்கு முன்னால் உள்ள சோதனைச் சாவடியில் அவர்களது முச்சக்கரவண்டி நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போதே கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப்பொருட்களும் 4 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேகநபர்களை ஹட்டன் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

