‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாய் 10.9 பில்லியன்) நிதியை கோரி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய பங்காளிகள் ஒரு மனிதநேய முன்னுரிமைத் திட்டத்தை (HPP)இன்று வியாழக்கிழமை (11) ஆரம்பித்தனர்.
இந்தத் திட்டமானது 2025 டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரை அவசர உதவி தேவைப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 658,000 மக்களைச் சென்றடைவதில் கவனம் செலுத்துகிறது என இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரு தெரிவித்தார்.
மனிதநேய முன்னுரிமைத் திட்டம்
கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் வியாழக்கிழமை (11) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த மனிதநேய முன்னுரிமைத் திட்டம் (HPP), சூறாவளியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பகுதிகளுக்கு உதவி வழங்குவதன் மூலம் சர்வதேச உதவிக்கான அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது என்றார்.

