2569 ஸ்ரீ புத்த வருடத்தின் அரச வெசாக் விழா, மூன்று நிகாயாக்களின் தேரர்கள்
மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் நேற்று (10) நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“பஜெத மித்தே கல்யாண – பஜெத புரிசுத்தமெ” (நற்குணங்கள் கொண்ட உன்னத
நண்பர்களுடன் பழகுவோம்) எனும் தொனிப்பெருளின் நடைபெறும் இம்முறை அரச வெசாக்
விழா, மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நுவரெலியா மாவட்டத்தை
மையமாகக் கொண்டு நடைபெறும்.
அரச வெசாக் விழாவுடன் இணைந்து
மகாநாயக்க தேரர்கள், அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் அறிவுறுத்தல்களின்படி,
ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சு, பௌத்த அலுவல்கள் திணைக்களம், மத்திய மாகாண சபை மற்றும்
நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு
செய்துள்ளன.

மேலும், மே 10ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகப்
பிரகடனப்படுத்தி, அரசின் கொள்கைத் திட்டத்திற்கு ஏற்ப மக்களின் ஆன்மீக
வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு பௌத்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் காலப்பகுதியில், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது
முடிக்கப்படாத விகாரைகளின் அபிவிருத்திப் பணிகளை முப்படைகளின் உதவியுடன்
நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரச வெசாக் விழாவுடன் இணைந்து, மக்களிடையே ஆன்மீக வளர்ச்சியையும்
பௌத்த மத விழிப்புணர்வையும் வளர்க்கும் வகையில் “கிளீன் ஸ்ரீலங்கா”
வேலைத்திட்டத்தின் மூலம் பல விசேட நிகழ்ச்சிகள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
முதல் நினைவு முத்திரை
பன்முக மத மற்றும் பன்முக கலாசார சமூகத்தைக் கொண்ட நுவரெலியா மாவட்டத்தில்
இந்த ஆண்டு அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்வது சிறப்பு நிகழ்வாக உள்ளதோடு,
நாடு முழுவதும் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்குவதும், உலகெங்கிலும் உள்ள பௌத்த
நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

2025 புத்த வருட அரச வெசாக் விழாவைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரையும்
இங்கு வெளியிடப்பட்டதுடன், அதன் முதல் நினைவு முத்திரை ஜனாதிபதிக்கு
வழங்கப்பட்டது.
மேலும், 2025 ஆம் ஆண்டு அரச வெசாக் விழாவுக்கு இணையாக, கொத்மலை மலியதேவ ரஜமஹா
விஹாரையை புனித பூமியாக அறிவிக்கும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை வழங்குதல் மற்றும்
குருநாகல் ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தை புனித பூமியாக அறிவிக்கும் ஸ்ரீ சன்னஸ்
பத்திரத்தையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.







