கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட
பொருளாதார மத்திய நிலையத்தினை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்
கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (12-08-2025) நேரடியாக
சென்று பார்வையிட்டுள்ளதுடன் இதன் செயற்பாடுகள் தொடர்பிலும்
கலந்துரையாடியுள்ளார்.
கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் 40
கடைத் தொகுதிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம்
கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
உரிய பயன்பாடு
இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையமானது உரிய பயன்பாடின்றி
40 கடைகளில் 30 வரையான கடைகள் நீண்ட காலமாக மூடியுள்ளன.
இந்த நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப்
பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில்
சென்று பார்வையிட்டார்.
அத்துடன் முழுமையாக இயங்காதுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை முழுமையாக
இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன்
கலந்துரையாடினார்.
இவ்விஜயத்தின் போது யாழ் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
க.இளங்குமரன்,மாவட்ட அரச அதிபர் எஸ். முரளிதரூ உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள்
மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.