ஜனாதிபதி நிதியம் மக்களின் நிதியம் என்றும், அது மக்களுக்குச் சொந்தமானது என்ற உணர்வை ஏற்படுத்த அரசாங்கம் விசேட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (14) நடைபெற்ற உயர்தரப் பரீட்சை சாதனையாளர்களைப் பாராட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரை, விசேட அதிகாரம் அல்லது பதவிகளை வகிப்பவர்களுக்கு மாத்திரம் நன்மையைப் பெறுவதற்கு இலகுவாக இருந்த, சாதாரண மக்கள் பயனடைவது கடினமானதும் சிக்கலானதுமான செயல்முறையாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை, இணையவழியில் (Online) மற்றும் தத்தமது பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பிக்கக்கூடிய எளிய முறைமைக்கு கொண்டுவர எமது அரசாங்கம் வழி வகுத்திருக்கின்றது.
கல்வி முறையில் மாற்றம்
இந்தச் செயற்திட்டங்கள் அனைத்தையும் நாம் மேற்கொள்வது, நமது மனித வளத்தை தற்போதைய உலகிற்கு ஏற்றவாறு மேம்படுத்தி, முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காகவே ஆகும்.
இன்றைய உலகின் சிக்கலான தன்மைகளைப் புரிந்துகொண்டு பயணிக்கக்கூடிய மனித வளத்தை உருவாக்க ஒரு அரசாங்கம் என்ற வகையிலேயே நாம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.

அந்த நோக்கத்திலேயே 2026 ஆம் ஆண்டு முதல் கல்வி முறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவர விசேட வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.
உற்பத்தித்திறன் மிக்க நல்ல பிரஜையை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
சுற்றுச்சூழலை நேசிக்கும், அதனைப் பாதுகாப்பதில் முன்னிற்கும், தலைமைத்துவப் பண்பு கொண்ட, கருணை மற்றும் கூட்டுமுயற்சி பற்றிய உணர்வுள்ள, ஜனநாயகத்தை மதிக்கும் பொறுப்புமிக்க மனித வளத்தை உருவாக்குவதே எமது தேவையாக இருக்கின்றது.
அரசாங்கத்தின் பங்களிப்பு
சகல அரசாங்கங்களும் உங்கள் கல்விக்காகப் பங்களித்துள்ளன. இந்தப் பங்களிப்பு, நாட்டின் அனைத்து மக்களினதும் வரிப் பணத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது.
ஆகையினால் அந்தச் சமூகத்திற்காகச் சேவையாற்றவும், தலைமைத்துவத்தை வழங்கவும் கூடிய திறமையானவர்கள் நீங்கள் என்பதாலேயே, நீங்கள் எமக்கு மிகவும் பெறுமதியானவர்களாகின்றீர்கள்.

இன்று வழங்கப்படும் இந்தக் கௌரவமானது, நாம் உங்களுக்காக மேற்கொள்ளும் ஒரு முதலீடாகும். அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, அரசாங்கத்தின் பங்களிப்பினால் பாராட்டுப் பெறும் நீங்கள், சமூகத்திற்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்
இந்த நிகழ்வின் போது, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மேல் மாகாண மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 361 சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

