பெண்களின் திறமைக்கும் அவர்களது சேவைக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குவதை இந்த முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உறுதிசெய்ய வேண்டும் என கபே(Caffe) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் முகமட் மனாஷ் மகீன் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களுக்கான டிஜிட்டல் மற்றும் ஊடகப் பாதுகாப்பை மையப்படுத்திய 3 நாள் பயிற்சி பட்டறை நிகழ்வானது யாழ்ப்பாணத்திலுள்ள (Jaffna) தனியார் விடுதி ஒன்றில் இன்றையதினம் (08) ஆரம்பமானது.
இந்தநிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் வகிபாகம்
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது அமைப்பால் பல்வேறு பயிற்சிப்பட்டறைகள் மற்றும் திட்டங்களை பெண்களுக்காக
மேற்கொண்டுள்ளபோதும் இணைய உலகில் பெண்களிடையே இருக்கும் ஆற்றல்களை
செழுமைப்படுத்தி இன்றைய உலகின் வேகத்துக்கேற்ப புதிய உத்வேகத்துடன் அவர்களை
வெளிக்கொணரும் களத்தை உருவாக்கும் முயற்சியாகவே குறித்த நிகழ்வு
முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக நாடளாவிய ரீதியில் அரசியல் பிரவேசத்தை முன்னெடுக்கவுள்ள அல்லது
அரசியல் நீரோட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற பெண்கள் நவீன உலகின்
தேவைக்கேற்ப ஆற்லுள்ளவர்களாக பரிணமிக்க வேண்டியது அவசியம்.
அதற்காக அவர்கள் தங்களை இன்றைய நவீன தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின்
பக்கமும் ஈடுபடுத்திக் கொள்வது அவசியமாகும்.
இதில் “கபே” அமைப்பு நாடு
முழுவதும் இவ்வாறான திட்டங்களை பெண்களிடையே கொண்டுசென்று அதில் வெற்றியும்
கண்டுள்ளது.
இந்நிலையில் சமூக ஊடக பங்களிப்பிலும் பெண்களின் வகிபாகம் முதன்மை வகிக்க
வேண்டும் என்ற நோக்கில் குறித்த நாடு முழுவதும் அரசியலில் ஈடுபட்டுள்ள
பெண்களுக்கான டியிற்றல் மற்றும் ஊடக பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை
ஒன்றை முன்னெடுத்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
இதேநேரம், பெண்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் ஊடகப் பாதுகாப்பை அரசியல் கட்சிகளும் துறைசார் அமைச்சும் உறுதிப்படுத்துவது அவசியம்.
அத்துடன் கூகுள் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களும் இதை உறுதி செய்வதற்கு தமது ஒத்துழைப்பகளை வழங்க வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இதேநேரம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனுக்களின் போது வேட்புமனுவில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக என்ற போர்வையில் பெண் வேட்பாளர்களை உள்ளீர்க்க வேண்டாம் என நாம் அனைத்து அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுகின்றோம்.
குறிப்பாக பெண்களின் பங்களிப்பை தேவைக்கானதாக எடுத்துக் கொள்ளாது அவர்களது திறமைகளினதும் மக்கள் மத்தியில் அவர்கள் ஆற்றிய சேவைகளினதும் அடிப்படையில் முன்னிறுத்து கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பெண்களுக்கு வாய்ப்புக்களை கொடுக முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.