பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளையும், சவால்களையும் தீர்ப்பதற்காக
பெண்கள் ஆணைக்குழு (Women’s Commission) ஒன்றை அமைக்க அரசாங்கம் கவனம்
செலுத்தி வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆணைக்குழுவுக்காக ஏற்கனவே ஏழு பேர் கொண்ட உறுப்பினர்கள் குழு
நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன குறிப்பிட்டுள்ளார்.
அமைக்கப்படவுள்ள ஆணைக்குழு
2024 ஆம் ஆண்டின் 34ஆம் இலக்கப் பெண்கள் அதிகாரமளித்தல் சட்டத்தின் கீழ்
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் மூலம், அரசாங்க மற்றும் தனியார் துறை வேலைத் தளங்களில்
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், தொந்தரவுகள் மற்றும் அநீதிகள் குறித்துப்
பெண்கள் முறைப்பாடுகளை செய்ய முடியும்.

முறைப்பாடு
அத்துடன், சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் தாக்குதல்கள் மற்றும்
ஒடுக்குமுறைகள் குறித்தும் இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும்.
மேலும், பெண்கள் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்குத் தேவையான
ஆலோசனைகளையும் இந்த ஆணைக்குழு வழங்கும் என்று பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன
தெரிவித்தார்.

