கண்டி – யட்டிநுவர பிரதேச சபையின் (Yatinuwara Pradeshiya Sabha) ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான சம்பிக்க நிலந்த, அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோரின் மரணம் தொடர்பாகப் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, அவர்களால் எழுதப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதத்தில் விஜேசிங்க என்ற நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலும் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்பு
பேராதனை யஹலதென்ன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சம்பிக்க நிலந்த உள்ளிட்ட மூவரும் நேற்று (29) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்தநிலையில் அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் கண்டியைச் சேர்ந்த ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜேசிங்க என்ற நபர் தன்னை ஒரு வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்று 5 லட்சம் ரூபா பணத்தையும் ஒரு சிற்றூந்தையும் வலுக்கட்டாயமாகப் பெயர் மாற்றியதாகக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம்
இறுதியாக, அந்தக் கடிதத்தில்,
‘எங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்ததற்குப் பொறுப்பேற்க வேண்டும், விஜேசிங்க சொன்னது எனது வாட்ஸ்அப்பில் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், சம்பிக்க நிலந்தவின் இளைய மகளும் பல முக்கியமான தகவல்களை காவல்துறையிடம் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

