வெளிநாடுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை நேற்று (16.2.2025) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Katunayake International Airport) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதான இளைஞனே இவ்வாறு விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரியகுளம் பகுதியில் ஒருவரைக் கடத்தி 8.4 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு ஆண் சந்தேக நபர்களும் இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிப்ரவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் கடத்தல் சம்பவத்தை திட்டமிட்டதாகக் கருதப்படும் முக்கிய சந்தேக நபர், துபாய்க்குச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோதே, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாண காவல்துறையினர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.