அரச படையினருக்கு காணி வழங்க யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க, ஒருங்கிணைப்புக் குழு தலைவரால், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலமை சுமூகமாக்கப்பட்டது.
அத்துடன் கடந்த காலத்தில் எப்போதும் நடைபெறாத ஒரு நிகழ்வு இன்றைய கூட்டத்தில் இடம்பெற்றதால் கூட்டத்தில் தத்தமது பிரதேச பிரச்சினைகள் சார் கருத்துக்களை கூறவந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகளது குரல்கள் அடக்கப்பட்டதுடன் அவர்கள் பெரும் அச்சமுற்ற நிலையில் மௌனமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, யாழ். மாவட்டத்தில் முப்படையினருக்கு அரச காணிகள் வழங்குவதான நோக்குடன் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டு தீர்மானம் ஒன்றை ஒருங்கிணைப்புக் குழு நிறைவேற்ற முற்பட்டது.
இந்நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தோன்றியதை அடுத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.
குறிப்பாக நெடுந்தீவில் உள்ள அரச காணி ஒன்றிலிருந்து கடற்படையினருக்கு ஒரு ஏக்கர் காணி வழங்க பிரதேச ஒருங்கிணைப்பு குழு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான அனுமதியை வழங்குமாறும் கோரப்பட்டது.
இந்நிலையில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்களுக்கு காணி இல்லாதிருக்கும் நிலையில் அரச படையினரின் தேவைக்காக காணி வழங்க முடியாது. இது யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்.

அத்துடன் மக்கள் காணி நிலங்களிலிருந்து அரச படையினர் வெளியேற வேண்டும் என்று எமது மக்கள் நாளாந்தம் போராடிவரும் நிலை ஒருபுறம் இருக்க, மறுபுறம் காணி இன்றி அடிப்படை தேவைகளைக் கூட நிறைவுசெய்ய முடியாது பல ஆயிரம் மக்கள் துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் மக்கள் காணிகளை மக்களுக்கு வழங்காமல் படைத்தரப்புக்கு வழங்க முடியாது என சுட்டிக்காட்டினர்.
இதன்போது அரச தரப்பு ஆதரவாளர் ஒருவருக்கும் காணி விடுவிக்கப்படாமையால் பாதிப்புற்றுள்ள தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் மேலதிக பொலிசார் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

