சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயர்(Keith Noyahr) மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
த நேசன் பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயர், கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு, தாக்குதலுக்கு இலக்கான பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
விசாரணைகள்
எனினும் விசாரணைகள் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 2017ம் ஆண்டு சம்பவம் தொடர்பில் ராணுவ மேஜர் லலித் ராஜபக்ச உள்ளிட்ட மூன்று ராணுவத்தினர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
அதன் பின் அதிகாரத்துக்கு வந்த கோட்டாபயவின் ஆட்சியில் அனைத்து விசாரணைகளும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டதன் காரணமாக இந்தச் சம்பவமும் அப்படியே மறக்கடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கீத் நொயர் கடத்தப்பட்டு, காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு தற்போதைக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.