தமது நிர்வாகத்தின் கீழ் திட்டமிடப்பட்ட சில முன்னேற்ற திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில், அநுர அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க,
அநுர குமார திசாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வெளியிட்ட கூட்டு அறிக்கை வரவேற்கத்தக்கது என்றும், அது, இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.
அநுரவின் முடிவு
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும், திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி மற்றும் தொழில்துறை மையமாக மேம்படுத்தும் திட்டத்தையும் முன்னெடுத்துச்செல்ல ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எடுத்து முடிவை தாம் பாராட்டுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எட்கா என்ற பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து விவாதிப்பதாக இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் அறிவித்துள்ளன.
அத்துடன் திருகோணமலை எரிபொருள் பண்ணைகளின் அபிவிருத்தியின் அடிப்படையில், திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி மற்றும் தொழில்துறை மையமாக மேம்படுத்துவதற்கு இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.