பொலன்னறுவை(polonnaruwa) டோபாவெவ வித்தியாலயத்தில் கிரிக்கெட் போட்டியைக் காணச் சென்ற மாணவர் ஒருவர், கால்பந்து கோல் கம்பம் தலையில் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இறந்தவர் தல்பொத்தா, பிஓபி 317 எண் 246 இல் வசிக்கும் எம்.கே.ஜி. தெனுவன் சேனாரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாயுடன் சென்ற மாணவன்
பலுகஸ்டமன மகா வித்தியாலயத்தில் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவராவார்.
தனது சகோதரியின் கிரிக்கெட் போட்டியைக் காண, தனது தாயுடன் டோபாவெவ மகா வித்தியாலயத்திற்குச் சென்றிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலையில் விழுந்த கோல் கம்பம்
முதற்கட்ட விசாரணையில், கால்பந்து கோல் அமைப்பு விளையாட்டு மைதானத்தின் நடுவில் வைக்கப்பட்டிருந்ததாகவும், போட்டிகளை நடத்துவதற்கு போதுமான இடம் இல்லாததால், ஒரு குழு கால்பந்து கோல் அமைப்பை சுமந்து சென்றபோது, பழுதடைந்த இடத்தில் இருந்து இரும்புக் குழாய் ஒன்று உடைந்து மாணவனின் மீது விழுந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் மாணவன் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாணவனின் உடல் உறுப்புகளை மற்றொரு மாற்றுத்திறனாளி குழந்தைக்கு தானம் செய்ய பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.