இந்தியாவில் (India) நடைபெற்றுவரும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ரி20 தொடரில் குமார் சங்கக்கார (Kumar Sangakkara) தலைமையிலான இலங்கை (Sri Lanka) அணி அரையிறுதி ஆட்டத்தில் பிரையன் லாரா (Brian Lara) தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.
ராய்பூரில் (Raipur) நடைபெறும் இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று (14.03.2025) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் தங்களது நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த தொடரில் பங்கேற்பர்.
அரையிறுதியில் இலங்கை
இதில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி தனது முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணியிடம் தோல்விகண்ட போதும் அடுத்து நடந்த தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வரிசையாக வெற்றியீட்டி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
அதன்படி இன்று நடைபெறும் 2ஆவது அரையிறுதியில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது.
நேற்றிரவு முதல் அரையிறுதி ஆட்டம் இந்திய – ஆஸி. அணிகளுக்கிடையில் நடைபெற்ற நிலையில் தொடரில் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.