வெளிநாட்டில் உள்ள தனிநபர்கள் மின்னணு தளங்கள் மூலம் இலங்கையிலுள்ள தனிநபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோர் மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்த நடைமுறை செயற்படும் என உள்நாட்டு வருவாய் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வற் வரியை பதிவு செய்தல், வரி செலுத்துதல் மற்றும் வரியை முறையாக பின்பற்றுதல் போன்ற நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சேவை
இது தொடர்பில் உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் வினவிய போது, இந்த வரி வெளிநாட்டில் உள்ள ஒருவர் இலங்கையில் உள்ள ஒருவருக்கு வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்குப் பொருந்தும் என குறிப்பிட்டார்.
உதாரணமாக, வலைத்தளம், மென்பொருள், கையடக்க தொலைபேசி செயலி அல்லது வேறு ஏதேனும் சேவை வழங்கப்படும் வற் வரி வசூலிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.