முன்மொழியப்பட்டுள்ள, அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கத்துக்கு (G2G)
இறக்குமதித் திட்டத்தின் கீழ் ஏழு நாடுகளிலிருந்து மருந்துகளை இறக்குமதி
செய்யும் முடிவானது, உள்ளூர் மருந்துத் துறையை வீழ்ச்சியடையச் செய்யும் என்று
மூன்று உள்ளூர் மருந்துத் துறை சங்கங்கள் எச்சரித்துள்ளன.
சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவுக்கு எழுதிய கூட்டுக் கடிதத்தில், மூன்று
முக்கிய மருந்துத் துறை சங்கங்கள், இந்த திட்டத்திற்கு தங்கள் கடுமையான
எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
மருந்து இறக்குமதி திட்டம்
இந்தக் கடிதத்தில், இலங்கை மருந்துத் தொழில்கள் சபையின் தலைவர் பிரதாபன்
மயில்வாகனம் இலங்கை தேசிய மருந்து உற்பத்தியாளர்கள் சபையின் தலைவர் லோஹித
சமரவிக்ரம மற்றும் இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நளின்
கன்னங்கரா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

முன்மொழியப்பட்ட பு2பு இறக்குமதித் திட்டத்தை செயற்படுத்துவது உள்ளூர்
மருந்துத் துறையை கடுமையாக பாதிக்கும் – நோயாளிகளின் உடல்நலம், தொழில்கள் முதலீடுகள் மற்றும் தேசிய பொருளாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் சங்கங்கள்
தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், முன்மொழியப்பட்ட திட்டத்தை நியாயப்படுத்த அரசாங்கம்
மருந்துகளின் செயற்கை பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது என்றும் அவர்கள்
குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் முன்மொழியப்பட்ட (G2G)இறக்குமதித் திட்டத்தை உடனடியாக நிறுத்தவும்,
செயற்கை பற்றாக்குறையை உருவாக்கியதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளை
விசாரிக்கவேண்டும் என்று இந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

