மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் கோழி மற்றும்
விலை உயர்ந்த வளர்ப்பு நாய் ஒன்றை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் திருடப்பட்ட கோழி, நாய் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
முறைப்பாடு பதிவு
மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 30 கோழிகள் மற்றும் வளர்ப்பு
நாய் ஒன்று திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கருவப்பங்கேணியைச் சேர்ந்த சந்தேகநபர் நேற்று முன்தினம் (19) 2700
மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வைத்தியரின் பண்ணையில் திருடப்பட்ட 30 கோழிகளில் சிலவற்றையும்
நாயையும் மீட்டுள்ளனர்.

விசாரணை முன்னெடுப்பு
குறித்த இளைஞன் நீண்டகாலமாக பல திருட்டு சம்பவங்கள்
தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்தவர் எனவும், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சந்தேகநபரை 3 நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான
நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

