கறுப்பு ஜனவரியை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பில் (Batticaloa) ஊடகவியலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு அருகில் ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் (30.01.2025) தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் ஊடகவியலாளர்
மட்டு. ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
மாலை 5.00 மணிக்கு ஒன்றிணைந்த ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நினைவுத் தூபியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தீப்பந்தம் ஏற்றி சுமார் ஒருமணித்தியாலம் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.