முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டேசி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
யோசித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டேசி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல்
அதன்போது நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைக்காக முன்னிலையாகியிருந்தனர்.
சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரிகை உள்ளிட்ட வழக்கின் அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி வழக்கின் விசாரணை நடைபெறும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

