சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரைனா (Suresh Raina) மீண்டும் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2016, 2017 ஆண்டுகளை தவிர, 2021 வரை விளையாடியவர் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைனா.
ஐ.பி.எல் வரலாற்றில் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் உருவெடுத்ததில் ரைனாவின் பங்கு மறுக்க முடியாதது.
ரைனாவின் அதிரடி
மூன்றாவது வீரராக களமிறங்கும் இடது கை துடுப்பாட்ட வீரரான ரைனாவின் அதிரடி, சென்னைக்கு எதிராக விளையாடும் அணிக்கு பெரும் தலைவலியாக இருந்தது.
ஐ.பி.எல் தொடரில் 205 போட்டிகளில் விளையாடியுள்ள ரைனா ஒரு சதம், 39 அரைசதங்கள் உள்பட 5,528 ஓட்டங்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
சின்ன தல
இரசிகர்களால் மிஸ்டர் ஐ.பி.எல், சின்ன தல என்று புனைப்பெயரால் அழைக்கப்படும் ரைனா, ஐ.பி.எல் வரலாற்றில் அதிக கெட்ஜ் (108) பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ரைனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஸ்வின் திரும்பியுள்ள நிலையில், ரைனாவும் அணியுடன் இணைவது இரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.