கிழக்கில் மனித புதைகுழிகள் தோண்டப்பட வேண்டும். அதனுடைய ஆரம்ப கட்டமாக
சத்துருக்கொண்டான் மனித புதைகுழி அதனுடைய உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ்
தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை
குறிப்பிட்டார்.
மேலும் அவர், “தமிழின அழிப்பின் உடைய ஆதாரமாக வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியிலே மனித
புதைகுழிகள் காணப்படுகின்றன.
இந்த புதைக்குழிகளில் செம்மணி மனித புதைகுழி 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டதன் பின்னர் அந்த
வழியால் சென்று பாடசாலை மாணவி கிரிசாந்தி குமாரசாமி ராணுவத்தினரால்
பிடிக்கப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கிரிசாந்தி படுகொலை
அதன் பின்னர்
அவரை தேடிச் சென்ற அவரது தாயார் அவரது சகோதரன் அயலவர்கள் மூன்று பேர்
ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதனை தொடர்ந்து அந்த வழக்கிலேயே கைது
செய்யப்பட்ட ராணுவ அதிகாரியான கேப்டன் சோமனரத்ன ராஜபக்ச வழங்கிய
வாக்குமூல ஒப்புதலின் அடிப்படையில் செம்மணியில் 400க்கு அதிகமானவர்கள்
ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்கின்ற
உண்மை அவரிடம் இருந்து வெளிவந்தது.
இதன் விளைவாக செம்மணி விவகாரம் பேசு பொருளாக
இருந்து கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த குழி மீண்டும்
தோண்டப்பட்டு ஒரு சில எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
பின்னர் அந்த விடயம்
இலங்கை அரசின் உடைய செயற்பாடுகளைப் போல அது கிடப்பிலே போடப்பட்டு அண்மையிலே
செம்மணியில் இருக்கின்ற சிந்துபாத்தி மயானத்தில் நீர்க்குழாய் பொருத்துவதற்காக
குழி வெட்டியபோது அங்கு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதனை தொடர்ந்து செம்மணி
புதைகுழி அகழ்வு விடயம் தொடங்கி இன்று 133க்கு அதிகமான எலும்புக்கூடுகள்
மீட்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

