புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் வைரவர்
கோவிலுக்கு அருகில் முன்னதாக விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்த பகுதியாக காணப்பட்ட நிலப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில்
நால்வரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(26) மாலை இடம்பெற்றுள்ளது.
தங்கம் புதைத்து வைத்திருப்பதாக
குறித்த பகுதியில் ஒரு குழுவினால் புதையல் தோண்டப்படுவதாக புதுக்குடியிருப்பு
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணைகளை
நடத்தி நால்வரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்த பகுதியாக
காணப்படுவதால் விடுதலைப்புலிகள் காலத்தில் குறித்த பகுதியில் தங்கம் புதைத்து
வைத்திருப்பதாக நம்பி புதையல் தோண்டும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக
தெரியவந்துள்ளது.
கைதானவர்கள் யாழ்ப்பாணம் மீசாலை, கிளிநொச்சி உருத்திரபுரம், பெரியபரந்தன், கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இவர்கள் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களையும் சான்றுப் பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார்
ஈடுபட்டுள்ளனர்.

