இனிய பாரதியின் சகாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில்
பிரதேச சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட தமிழ் பகுதிகளில் கடந்த
காலத்தில் இனியபாரதி தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இயங்கி வந்த முகாம்கள் மற்றும் மயானங்களை இரண்டு
தினங்களாக குற்றப் புலனாய்வு பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸ் உயர்
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை – திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார், துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த பல சம்பவங்கள் தொடர்பில் இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள்
உறுப்பினர் கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை
கடந்த 6ஆம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து
சிஜடியினர் கைது செய்தனர்.
சகாக்கள் கைது
இந்த கைதையடுத்து இனியபாரதியின் முன்னாள் சாரதியான செந்தூரனை கடந்த 9ஆம்
திகதி பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புக்கு தனியார் போக்குவரத்து பேருந்து வண்டியை
செலுத்தி சென்ற போது அவரை கல்முனை நகரில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில்
நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் இருந்து வந்த புலனாய்வு அதிகாரிகள் தம்பிலுவில் மகாவித்தியாலயத்துக்கு அருகில் பாடசாலை வீதியில் 2004ஆம் ஆண்டு
தொடக்கம் இயங்கி வந்த இனிய பாரதியின் காரியாலயத்தை முற்றுகையிட்டு சோதனையில்
ஈடுபட்டனர்.
அவ்வாறே தம்பிலுவில் பிரதான வீதியில் இயங்கி வந்த ரி.எம்.வி.பி முகாம், தம்பட்டையில் இயங்கி வந்த முகாம், திருக்கோவில் மயானம் போன்றவற்றுக்கு சென்று
சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள
தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீட்டை ஏற்கனவே கைது
செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை வெள்ளை நிற ஆடை
அணிந்து இரண்டு வெவ்வேறு ஜீப் வண்டிகளில் அழைத்து வந்து சோதனையிட்டனர்.
விசேட சோதனைகள்
இதன் பின்னர் சம்மாந்துறையில் செயற்பட்ட முகாம் உட்பட அந்த கால பகுதியில்
அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் ரிஎம்விபி முகாம்களாக செயற்பட்டவற்றை சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு அங்கு சந்தேகத்துக்கு இடமாக
அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலத்தை தோண்டி சோதனையிடுவதற்கு நீதிமன்ற
அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த இனிய
பாரதியின் மற்றுமொரு சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த முன்னாள்
பிரதேச சபை உறுப்பினரான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி
விக்கினேஸ்வரன் அவரது வீட்டில் வைத்து இன்று மாலை 3.00
மணியளவில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு விசாரணைக்காக கொண்டு
செல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை குற்றப்புலனாய்வுத்துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்
புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, 2005 மற்றும் 2008க்கு இடையில்
கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள்,
துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மற்றும்
மிரட்டி பணம் பறித்தல் குறித்து நீண்ட விசாரணையை மேற்கொண்டது.
பல்வேறு குற்றச்செயல்கள்
குறித்த விசாரணையில், முதல் சந்தேக நபரான இனியபாரதி 2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்
புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா பிரிவின் திருக்கோவில்
பகுதியில் உள்ள ஆயுதமேந்திய முகாமின் தலைவராகப் பணியாற்றியவர்.
இவர் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் கருணா பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின்
அம்பாறை மாவட்ட ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றியவர்.
என்பதுடன்
2012 முதல் 2015 வரை அந்தப் பிரிவு பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின்
கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியபோது பல படுகொலை மற்றும் ஆட்கள்
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.