இஸ்ரேல் (israel) இராணுவ முகாம் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.
உரிமை கோரிய ஹிஸ்புல்லா அமைப்பு
ஹைஃபாவிற்கு தெற்கே 20 மைல் (33 கிமீ) தொலைவில் உள்ள பின்யாமினா என்ற நகரத்திற்கு அருகில் உள்ள இராணுவ தளத்தை ஆளில்லா விமானம் தாக்கியது. இதில் 65க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

ஈரான் (iran)ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா, ஹைஃபா மற்றும் டெல் அவிவ் இடையே உள்ள பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேல் கோலானி படைப்பிரிவின் பயிற்சி முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் தெரிவித்தது.
தெற்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய கொடிய தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் படை வெளியிட்ட அறிவிப்பு
இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள தகவலில், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஏவிய ஆளில்லா விமானம் ஒன்று இராணுவ தளத்தின் மீது தாக்கியது.
சம்பவத்தில், இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்கள் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் துயரை இராணுவம் பகிர்ந்து கொள்கிறது.
அவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் என பதிவிட்டு உள்ளது. புரளிகள் மற்றும் காயமடைந்த நபர்களின் பெயர்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர்களின் குடும்பத்தினரை மதிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.
Source: https://ibctamil.com/article/israeli-soldiers-killed-by-hezbollah-drone-attack-1728894378

