யாழ்ப்பாணம்- நீர்வேலி(Neervely) வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வாழைக்குலை தராசு ஒன்றுக்கு மாவட்ட நிறுத்தல் அளவுகள் கண்காணிப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர்
கூட்டுறவு சங்கத்தின் ஊடாக வாழைக்குலை உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள்
பல வருடங்களாக வாங்கப்பட்டு வருகின்றன.
இந்த சங்கம் தொடர்பில் காலத்துக்கு காலம் பல்வேறு முறைப்பாடுகள்
முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தல் கருவி முத்திரை இடப்படாமல்
பாவிக்கப்படுவதாக யாழ். மாவட்ட செயலகத்தில் இயங்கும் நிறுத்தல் அளவுகள்
அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.
தராசு பறிமுதல்
இந்தநிலையில், இன்றையதினம் (4) குறித்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள்
அங்கு வாழைக்குலைகள் நிறுப்பதற்கான கருவிகளின் பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது, ஒரு நிறுத்தல் கருவி பல வருடங்களாக முத்திரையிடப்படாமல்
பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொறுப்பான மாவட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது
குறித்த விடயம் தொடர்பில் உறுதிப்படுத்தியதுடன் தமது கொழும்பு தலைமையகத்துடன்
கலந்துரையாடி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய உரிய சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என தெரிவித்தார்.