கொழும்பிலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் வைத்து அவுஸ்திரேலியப் பிரஜையான பெண்
ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவர், நேற்று (15.12.2025) கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு டி சில்வா முன்னிலையில்
முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சந்தேகநபரை தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின்
அடிப்படையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
வெளிநாட்டுப் பிரஜையின் அனுசரணையின் கீழ்
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியப் பெண், சுற்றுலாத்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மசாஜ் நிலையத்தினுள் வைத்து தனக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக
முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்ததாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசாஜ் நிலையம், ஒரு வெளிநாட்டுப் பிரஜையின் அனுசரணையின் கீழ் பார்வைக்
குறைபாடுடைய நபர்களால் நடத்தப்பட்டு வருவதாக பம்பலப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தில் மேலும் விளக்கமளித்தனர்.
முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகளையும் ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரைப்
பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

