முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதில் எவ்வித சட்டவிதிகளும் மீறப்படவில்லை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாம சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணிலின் கைதில் உள்ள சட்டசிக்கல்கள் தொடர்பில் விளக்கமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு
இது குறித்து பிரதீபா மஹனாம மேலும் கூறியுள்ளதாவது, “1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 7ஆவது சரத்தில் 35/1 சரத்தில் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமையில் ஜனாதிபதிக்கு எதிராக சிவில் வழக்கு அல்லது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்ய முடியாது.

மேலும், 19ஆவது திருத்தச்சட்டத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதியால் அடிப்படை மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருந்தால் நீதிபதியால் வழக்கு தாக்கல் செய்யலாம்.
சட்டத்தில் தடை
எவ்வாறாயினும், வழக்குத் தாக்கல் செய்வதற்கான மேற்குறிப்பிட்ட சிறப்புரிமைகள் முன்னாள் ஜனாதிபதிக்கு பொருந்தாது.முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சிவில் மற்றும் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதற்கு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், இதற்கு முன்னர் நீதவான் நீதிமன்றத்திற்கு B அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து நீதிமன்றத்திற்கு தகவல்களை வழங்கியே முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதன் அடிப்படையிலே ரணிலிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தீவிர விசாரணைகள் நடைபெற்றுள்ளதாகவே தோன்றுகிறது.இதில் எவ்வித சட்டவிதிகளும் மீறப்படவில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.

