சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் நுவரெலியா வட்டவளை
தியகல பொலிஸ் சோதனை சாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (01.11.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு சிகரெட்டுக்களை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பொலிஸார்
குறித்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தடுப்புக் காவல்
அதன்படி, அவிசாவளையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வான் ஒன்றினை நிறுத்தி
சோதனைக்குட்படுத்திய போது, அதில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு பெட்டிகளில் 112 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அவிசாவளையைச் சேர்ந்த 25 வயதுடையவர்
எனவும் இவரை தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



