யாழ்ப்பாணம் – சில்லாலையைச் சேர்ந்த குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கி
கொலை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா
மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (03.09.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கற்பகபுரம் கிராமத்தில் கடந்த 26
ஆம் திகதி அன்று கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த 36
வயதுடைய மைந்தன் இருதயராஜா எனும் யாழ் சில்லாலையைச் சேர்ந்த குடும்பஸ்தர்
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில்
பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்துள்ளார்.

இந்நிலையில், வவுனியா மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்
விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மறைந்திருந்த நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வவுனியா, கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த 29 வயதுடைய நபர் என்பதுடன்
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த
பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

