ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒரு சில கருத்துக்களை மாத்திரம் தான் ஆதரிப்பதாவும், அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் தனக்கு எந்தவொரு திட்டமும் இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன கலந்து கொண்டிருந்ததோடு, அவரை பாராட்டும் வகையிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.
அரசாங்கத்துடன் இணைய நடவடிக்கை
இதையடுத்து, ராஜித்த சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைய நடவடிக்கை எடுத்துள்ளதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், இலங்கையில் காணப்பட்ட வரிசை யுகத்தை இல்லாதொழித்து நாட்டின் பொருளாதார நிலையை ரணில் விக்ரமசிங்க மேம்படுத்தியுள்ளதாக ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ரணிலின் அபிவிருத்தி நடைமுறை தொடர்பில் மாத்திரம் தான் கருத்து வெளியிட்டதாகவும், அரசாங்கத்துடன் இணையும் எந்தவொரு நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் அதிகாரத்தையும் பலத்தையும் கைப்பற்றும் நோக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என ராஜித்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்துக்காகவோ எதிர்க்கட்சிக்காகவோ அன்றி தாம் மக்களுக்காக மாத்திரம் அரசியலில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.