கம்பஹாவின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பரிசளிப்பு விழாவில் உரையாற்றிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சகம் பாடசாலை முதல்வரிடமிருந்து அறிக்கையொன்றை கோரியுள்ளது.
கம்பஹா சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் பரிசளிப்பு விழா நிகழ்வு மேடையில் குறித்த மாணவி அதிபரை பெற்றோர் அதிதிகள் முன்னிலையில் மேடையில் ஏறி விமர்சனம் செய்துள்ளார்.
பெரும் பரபரப்பு
தமக்கு கிடைக்கப் பெறவிருந்த விருதினை அநீதியான முறையில் நிறுத்தி பொருத்தமில்லாத ஒருவருக்கு வழங்கியதாக விழா மேடையில் மாணவி குற்றம் சுமத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் தொடர்புடைய காணொளி பரவலாக பகிரப்பட்டதையடுத்து, அந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமைச்சகம் இந்த விடயத்தின் மீது கவனம் செலுத்தியுள்ளதாகவும், பெறப்படும் அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் மேலதிக நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நலக்க களுவேவா தெரிவித்துள்ளார்.
நியாயமான விசாரணை
மேலும், அந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலான நிலையில், சிலர் மாணவியின் தைரியமான வெளிப்பாட்டை பாராட்டியிருந்தனர்.

அதேவேளை, விருது பெற்ற மற்றொரு மாணவியும் அதற்கு தகுதியானவரே என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாடசாலையின் பழைய மாணவிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் நியாயமானதும் வெளிப்படையானதும் ஆன விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

