தமிழ் மக்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை
பேரவைக்கு சொல்ல வேண்டிய செய்தியை நாங்கள் சரியான விதத்தில் சொல்லுவோம் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று(06) கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா விற்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ள நிலையில் அக்கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையொப்பமிடுமா? ஏன்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பின்பெருமாறு பதிலளித்தார்.
இன வன்முறைகள்
அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் என்ன என்பதல்ல. அந்த கடிதம் எதற்காக செய்யப்படுகின்றது என்று விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றார்கள்,.கையொப்பமிடாத தரப்புகள் எல்லாம் தங்களுடைய பெயர்களை அதிலே இணைத்து விட்டார்கள் என்றெல்லாம் குறிப்பிடுகின்றார்கள்.
தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் அதனோடு ஈடுபடாமல் இருப்பது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகின்றோம். எங்களுடைய கூட்டத் தீர்மானத்தின் படி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு நாங்கள் சொல்லுகின்ற செய்தி சரியான முறையில் தெரிவிப்போம்.
உரிய நேரத்திலே அதனை செய்வோம் என்ற முடிவை எடுத்திருக்கின்றோம்.தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலே தமிழரசு கட்சி தவறான நிலைப்பாடுகளை கொண்டிருக்காமல் பொதுவான நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம்.
செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற மனித என்புத் தொகுதிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன வன்முறைகள் போர் குற்றங்கள் தொடர்பில் நாங்கள் சர்வதேச பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறி சர்வதேச ஈடுபாட்டை நாங்கள் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பதவியில் இருந்து நீக்குவதற்கான சட்டம்
அத்தோடு, நாடாளுமன்றத்தினால் பதவியில் இருந்த தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து விலக்குகின்ற பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகாரிகளை பதவியிலிருந்து விலக்குகின்ற சட்டம் முதன் முதலில்
பாவிக்கப்பட்டிருக்கின்றது. இது 17 ஆவது அரசியலமைப்பு திருத்தம்
நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதாவது அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டதன்
பின்பு அந்த அரசியலமைப்பு பேரவையினால் பதவியில் அமர்த்தப்படும் இரண்டு
அதிகாரிகளான சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் இவர்களை பதவியில் இருந்து
நீக்குவதற்கான வழிமுறை ஒன்று இச் சட்டத்திலே கொடுக்கப்பட்டுள்ளது.
இருபது வருடங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த இந்த சட்டம் முதன்முறையாக
நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகவே இது ஒரு முக்கியமான விடயம் சுயாதீனமான இந்த
பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் வேறு விதமாக பதவி நீக்கப்பட முடியாது. இந்த பிரேரணை நாடாளுன்றத்தில் விவாதித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது
ஒருவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. அரசாங்கம் எத்ர்க்கட்சி என்ற பிரிவினை
இல்லாமல் வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
விடயமாகும்.
குறிப்பாக சிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கும்போது நாடாளுமன்றம் இரண்டாகப்
பிரிந்தது.அந்தப் பதவி நீக்க பிரேரணையானது தவறான முறையில்
நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆட்சி மாற்றத்தின் பின் தவறான பிரேரணை என்ற
அடிப்படையில் அவர் மீளவும் பதவியில் அமர்த்தபட்டார்.
இம்முறை சுயாதீன பதவியில் உள்ள ஒருவர் எதேச்சதிகாரமாக பதவி
நீக்கப்படாமல் விசாரணை குழு அறிக்கையினை வைத்து அதனை நாடாளுமன்றத்தில்
விவாதித்து மிகப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்று அவர்
மேலும் குறிப்பிட்டார்.