சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 கடற்றொழில் வலைகளை மன்னார் மாவட்டத்தில்
பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என தேசிய மக்கள்
சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்திற்கு ஜனாதிபதி நேரடியாக விஜயம் செய்து மாவட்ட
அபிவிருத்தி குழு கூட்டத்தை அவசரமாக கூட்டி இருந்தார். வடக்கு மாகாணத்தில்
மன்னார் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் வெள்ள அனர்த்தத்தில்
பாதிக்கப்பட்டிருந்தது.
இடர் ஏற்பட்ட காலத்திலிருந்து மீனவர்களுடைய பிரதான கோரிக்கையாக, தங்களுக்கு
வாழ்வாதாரம் வழங்கப்படவில்லை. தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு
மிகவும் துன்பியலுக்கு உட்பட்டதாக அவர்களுடைய முறைப்பாடு இருந்தது.
கடுமையான உத்தரவு
இந்த
கோரிக்கையை நான் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி இருந்தேன்.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல்
வீட்டிலேயே வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு உணவு
தட்டுப்பாடு கூட இருக்கிறது எனத் தெரியப்படுத்தி இருந்தேன்.
ஜனாதிபதி மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற கிட்டத்தட்ட 12000 மேற்பட்ட
மீனவர்களுக்கு உடனடியாக இரண்டு வாரங்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதாகவும்
அதேபோல் வடக்கு மாகாண மீனவர்களுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்பட இருக்கின்றது.
அத்துடன் சேதமடைந்த படகுகளை திருத்துவதற்கும் ஏனைய கடற்றொழில் உபகரணங்களை
திருத்துவதற்கும் உரிய நிதியினை விடுவிப்பதாக கூறப்பட்டது.
அது மட்டுமல்லாமல் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 கடற்றொழில் வலைகளை
மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி
கோரப்பட்டுள்ளது.
இதுக்கும் மேலாக பாடசாலை மாணவர்களுடைய தரவுகள் சேகரிப்பதில் சில மந்தநிலை
காணப்பட்டது. அது தொடர்பாக ஜனாதிபதி கடுமையான உத்தரவை அதிகாரிகளுக்கு
வழங்கினார்.
வருகின்ற 31 ஆம் திகதிக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து
மாணவர்களுக்கும் தலா 15000 ரூபாய் ஆரம்ப கொடுப்பனவாக கொடுத்து அவர்களுடைய
கற்றல் உபகரணங்கள், பாடசாலை பைகள், சப்பாத்துக்கள், சீருடை போன்றவற்றை
உடனடியாக கொள்வனவு செய்வதற்கு வழங்குமாறு கூறியிருக்கின்றார்.
விசேடமாக பாதைகள் முழுமையாக மோசமான நிலையை அடைந்திருக்கின்றது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
வவுனியா,
மன்னார் மாவட்டங்களில் குறிப்பாக செட்டிக்குளம் போன்ற பிரதேசங்களில் கூடுதலாக
பாதைகள் புனரமைக்க வேண்டியிருக்கின்றது. அது தொடர்பாகவும் ஜனாதிபதி வினவி
இருந்தார்.

உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை
போன்றவர்களால் கோரிக்கைகள் விடப்பட்டன. உடனடியாக தற்காலிகமாக பாதைகளை இரண்டு
வாரங்களுக்குள் அமைத்து கொடுக்குமாறும், நிரந்தர தீர்வாக அவர்களால் கோரிக்கை
விடப்பட்ட நிதியினை விடுவிப்பதற்கும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட மிகவும் பிரதான பிரச்சனையாக காணப்பட்ட கால்நடை இழப்புகள். கிட்டத்தட்ட
மன்னார் மாவட்டத்தில் 31000 இற்கு மேல் கால்நடை இழப்பு ஏற்பட்டிருக்கின்றது.
அதில் மிகவும் பிரதானமாக மாடுகள், ஆடுகள் இவை ஆயிரக்கணக்கில் இறந்துள்ளன.
அவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பாகவும் விரிவாக கருத்துரைக்கப்பட்டது.
இழப்புகளை வெவ்வேறு வகையாக பிரித்து ஒவ்வொரு வகையாக பாதிக்கப்பட்ட அனைவரையும்
உள்வாங்கக்கூடிய வகையிலே தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 70 குடும்பங்களின் வீடுகள் முழுமையாக
அழிவடைந்துள்ளது.
இந்த 70 குடும்பங்களுக்கும் உடனடியாக காணிகளை இனங்காணுமாறு
கூறப்பட்டுள்ளது ஒரு வாரத்துக்குள்ளே அரச காணிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு
அந்த அரசு காணிகளில் குடியேறுவதற்காக தலா ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50 லட்சம்
ரூபாய் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளை ஜனாதிபதி
பணித்திருக்கின்றார்.
நாடாளுமன்ற அமர்வு
செட்டிக்குளம் பிரதேசத்தினுடைய கந்நசாமி நகர், மன்னார் மாவட்டத்தில் உள்ள
நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட மடுக்கரை மற்றும் கூராய் போன்ற இடங்களில்
மீள மக்கள் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.
இவ்வகையான கிராமங்களில் மழைக்காலங்களில் தொடர்ச்சியாக வெள்ள பிரச்சனை
ஏற்படுவதால் இவர்களை மீளவும் வேறு இடங்களில் காணிகளை இனம் கண்டு உடனடியாக
குடியமத்தக்கூடிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் வன இலாகா திணைக்களம், அரசாங்க அதிபர் உட்பட சம்பந்தப்பட்ட
திணைக்களங்கள் விரைவாக அந்த காணிகளை இனம் கண்டு அந்த மக்களை வேறு இடங்களில்
குடியமர்த்தக் கூடிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு பல்வேறுபட்ட மக்களினுடைய கோரிக்கையை ஜனாதிபதி ஏற்று எந்தவித
கோரிக்கைக்கும் மறுப்பு தெரிவிக்காமல் முழுமையான ஒரு காத்திரமான ஒரு கூட்டமாக
மன்னார் கூட்டம் இருந்தது.
வீதிகளுக்கான நிதிகள் மாகாணத்தின் ஊடாக விடுவிப்பதற்குரிய வாய்ப்புகள்
இருக்கின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகளுக்கு இவ்வருடம் மேலதிக
நிதி வழங்குவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றது.
அதற்காக வருகின்ற 18 ,19 ஆம்
திகதிகளில் விசேட நாடாளுமன்ற அமர்வு நடைபெற இருக்கின்றது. எங்களுடைய அரசாங்கத்தை பொறுத்த வரையில் மக்களுடைய அரசாங்கம் என்ற வகையில் இந்த
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை காலமும் எந்த
அரசாங்கமும் செய்யாத அளவில் நிவாரண பணிகளை அள்ளி நாங்கள் வழங்கி
இருக்கின்றோம்.
நிச்சயமாக அந்த மக்களுக்கு அது ஒரு காத்திரமான விடயமாக
இருக்கும். எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக அவர்களை கைவிடாமல்
கண்காணித்து அவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு நாங்கள்
தீர்மானித்திருக்கின்றோம்.
அது மட்டுமல்லாமல் இயந்திர உபகரணங்கள் பற்றாக்குறை பிரதேச சபைகளுக்கும்,
உள்ளூராட்சி நிர்வாகங்களுக்கும் காணப்படுகின்றது. அந்த இயந்திரங்களை ஏற்கனவே
கொள்வனவு செய்யப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி
செய்யப்பட்டிருக்கின்றன. அந்த இயந்திரங்களை குறிப்பாக உள்ளூராட்சி சபைகளுக்கு
உட்பட்ட பிரதேச சபைகளுக்கு வவுனியா, மன்னார் பிரதேச சபைகளுக்கு வழங்குவதற்கும்
முன்னுரிமை வழங்குவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருக்கின்றார்.
மேலதிக கொடுப்பனவு
இதன் மூலமாக
இந்த கிராமிய வீதிகளை விரைவுபடுத்தி அமைப்பதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.
வவுனியா மாவட்டத்தில் குறிப்பாக செட்டிக்குளம், நெடுங்கேணி அதேபோல
நகர்ப்புறத்தில் திருநாவற்குளம் ஏனைய தரணிக்குளம், கல்மடு பூம்புகார் போன்ற
பிரதேசங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த பிரதேசங்களிலும்
எங்களுடைய அரசாங்கம் கூடுதல் கவனத்தை செலுத்த இருக்கின்றது.
இவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்ற 25000 ரூபாய் கொடுப்பனவை விரைவுபடுத்தி இந்த
வாரத்துக்குள் வழங்கி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. அது
மட்டுமல்லாமல் மேலதிகமாக இதில் இனம் காணப்பட்ட முழுமையாக வீடுகளில் உள்ள
பாத்திரங்கள் தளபாடங்கள் அழிவடைந்த குடும்பங்களுக்கும் மேலதிகமாக 50000 ரூபாய்
கொடுப்பனவுக்குரிய தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.
நெற்பயிர் தவிர தானியங்கள், வீட்டு தோட்டங்கள் என்பவற்றின் அழிவுக்க்
இழப்பீடு வழங்குவதில்லை என்ற குறைப்பாடு இருந்தது. அதை நாங்கள் சுட்டிக்காட்டி
இருந்தோம். எனவே அவர்களுக்கும் அந்த இழப்பீடுகளை வழங்குவதற்குரிய ஒழுங்குகள்
செய்யப்பட்டிருக்கின்றன. அந்த தகவல்களை விரைவுபடுத்தி அனைத்தையும் இரண்டு
வாரங்களுக்குள் தகவல்களை சேகரித்து உடனடியாக சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு
பணிக்கப்பட்டிருக்கின்றது.
இதில் நான் முக்கியமான ஒரு விடயத்தை கூற வேண்டும்.
இந்த வெள்ள அனர்த்தத்தின்
போது இரவு பகல் பாராது பணியாற்றிய அரச அதிகாரிகள், இராணுவத்தினர்,
கடற்படையினர், விமானப்படையினர் விசேடமாக இந்த விடயங்களை வெளிக்கொணர்ந்த
ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், அதேபோல் தேசிய மக்கள் சக்தியின்
உறுப்பினர்கள், இளைஞர் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்.
விசேடமாக மன்னார் மாவட்டத்திலும் வவுனியா மாவட்டத்திலும் அனுராதபுரம்
மாவட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 300 பேருக்கு மேல் தொண்டர் அடிப்படையிலே
இரண்டு நாட்கள் வந்து வீடுகளை கிணறுகளை கழுவுவதிலும் பாடசாலைகளை சுத்தம்
செய்வதிலும் சகோதரத்துவத்துடன் இங்கு செயல்பட்டு இருந்தார்கள்.
எந்த ஒரு
அரசாங்க காலத்திலும் நடக்காத சிறப்பான ஒரு விடயமாக மக்களால் இந்த விடயம்
கருதப்படுகின்றது.
நிச்சயமாக இதன் மூலமாக மக்களினுடைய அந்நியோனியமும் இடர் காலங்களிலே இடர்
மக்களுக்கு உதவுகின்ற ஒரு மனிதநேய பண்பு எங்கள் மக்கள் மத்தியிலே
வளர்ந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
அவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்
கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

