மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை மட்டக்களப்பு
மாவட்டத்திலே மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி
ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று (10.10.2024) நடைபெற்ற மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டு கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில்,
“ஒவ்வொரு சுகாதார உத்தியோகஸ்தர்களும் ஒவ்வொரு சுகாதார தூதுவர்களாக விளங்கி
அவர்கள் பணிபுரிகின்ற அனைத்து அலுவலகங்களிலும் மக்களுக்கு மார்பக புற்றுநோய்
தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
பரிசோதனை நடவடிக்கைகள்
மேலும், உத்தியோகஸ்தர்கள்
குடும்பங்களிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும், அதுவே சமூகத்தில்
விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.
தற்போது மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது.
இதனை நாங்கள்
விழிப்புணர்வு வழங்குவது மாத்திரமில்லாமல் முதற்கட்டமாக பெண்கள் சுய மார்பு
பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் 20 வயதில் இருந்தும்,
பின்னர் 35 வயதில் இருந்து பரிசோதனைகளை பெண்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்காக
பொது சுகாதார மாதுக்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள்.
35 வயதிலிருந்து பெண்களுக்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பெல்
மூமண்ட் கிளினிக் எனப்படும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது, 3 வருடத்திற்கு ஒரு தடவை ஏனும், இந்த
பரிசோதனையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவற்றுக்கு மேலாக உடலில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படுமிடத்து, மார்பகங்களில்
அல்லது உடலில் வேறு ஏதும் இடங்களிலும் சிறு கட்டிகள் உருவாகும் என
சந்தேகப்பட்டால், மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் இயங்கிவரும் புற்றுநோயை
ஆரம்பத்திலேயே அறிகின்ற ஒரு சுகாதார சேவை நிலையத்திற்குச் சென்று பரிசோதனைகளைப்
பெற்றுக் கொள்ள முடியும்.
விழிப்புணர்வு பேரணி
அந்த நிலையத்தின் தொலைபேசி இலக்கம் என்பன இருக்கின்றன. அதனுடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே அனுமதிகளை பெற்றுக் கொண்டு எதுவித தாமதம்
இன்றி இரகசியமான முறையில் நிலையத்திற்கு நேரிலே சென்று பரிசோதனைகளை மேற்கொள்ள
முடியும்.
மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகள் மேலதிக ஸ்கேன் வசதிகளையும்
பெற்றுக் கொள்ள முடியும். சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக அந்த
நிலையம் காத்திருக்கின்றது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
களுவாஞ்விகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமான குறித்த விழிப்புணர்வு பேரணி
களுவாஞ்சிகுடி பிரதான வீதியூடாகச் சென்று பட்டிருப்பு வீதிவழியாகச் சென்று
மீண்டும் களுவாஞ்வாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையை வந்தடைந்தது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை, களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி
அலுவலகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு பிராநிதிய சுகாதார சேவைகள் பணிமனையின்
தொற்றா நோய் பிரிவு, இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு பிரிவினர்,
உள்ளிட்ட பலரும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் செயலாளர் எந்திரி என்.
சிவலிங்கம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் க.
புவநேந்திரநாதன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், வைத்திய
நிபுணர் கருணாகரன், மற்றும் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து
கொண்டுள்ளனர்.