“நான் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்”என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.
புதிய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரான் (Iran) பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடிதம் அனுப்பியதாக கூறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அச்சுறுத்தல்
அதன்போது, ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது, என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், என ட்ரம்பிற்கு ஈரான் ஜனாதிபதி கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க உத்தரவு வழங்குவதையும் அச்சுறுத்தல்களை விடுப்பதையும் தாங்கள் ஏற்றுக் கொள்ள முயடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெஹ்ரான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக அச்சுறுத்தப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் அதிகபட்ச அழுத்தம்
டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதியாக தனது முதல் பதவிக்காலத்தில் ஈரானை உலகப் பொருளாதாரத்திலிருந்து தனிமைப்படுத்தவும், அதன் எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்தை நோக்கி நகர்த்தவும் தனது அதிகபட்ச அழுத்தத்தை பயன்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், அதே அதிகபட்ச அழுத்த பிரச்சாரத்தை தனது இரண்டாவது பதவிக் காலத்திலும், ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக நிலைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.