2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கும், வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் நிதி மானியத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரால் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், 2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு ஹெக்டெயர் ஒன்றுக்கு 25,000 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்டேயருக்கு வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு நிதி மானியம்
மேலும், வயல் காணிகளில் மேற்கொள்ளப்படும் வேறு போகப் பயிர்களுக்கு ஹெக்டெயர் ஒன்றுக்கு 15,000 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்டெயருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்துக்கான பணம் திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாக அரச தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் உர மானியத்துக்கான பணத்தை சில விவசாயிகள் பெறவில்லை என்றும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne ) குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (18) நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரட்ண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.