யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் (Base Hospital, Point Pedro) ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
வைத்தியசாலையில் நுழைந்து கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை நபரொருவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்தே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேராட்டமானது இன்று (10.6.2024) மதியம் 12 மணி முதல் ஒரு மணி வரையான நடைபெற்றுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 8ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை சந்தேக நபர் தாக்கியுள்ளார்.

இந்நிலையிலேயே, குறித்த சம்பவத்தினை கண்டித்து வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, “உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து, ஆயுதம் தாங்கிய பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்து மற்றும் சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்” போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Source: https://ibctamil.com/article/hospital-staff-protest-attack-nurse-in-jaffna-1718015997

