புங்குடுதீவு (Punkudutivu) கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (23.05.2025) பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
ஆலய நிர்வாக சபை
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், தற்போதைய நிர்வாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும், கோவில் ஆன்மீக தலமா வியாபார நிலையமா, கோவில் களவு போனால் முறைப்பாடு செய்வது யாரிடம், காவல்துறை முறைப்பாட்டை தலைவர் மீளப்பெற முற்பட்டது ஏன், தடயங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது, அம்மனுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கியது யார், உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் எதிர்வரும் 29ஆம் திகதி ஆலய நிர்வாக சபையினர் மற்றும் இன்று போராட்டத்தை முன்னெடுத்த மக்களையும் அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதாக தெரிவித்துள்ளார்.
NEWS : Thampithurai Piratheepan




