கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 558
கிலோகிராம் நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட மாட்டிறைச்சி
கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் சுகாதார
சீர்கேடான முறையில் உரிய அனுமதியின்றி பெருந்தொகை மாட்டிறைச்சி
கொண்டுவரப்பட்டுள்ளது.

அவை வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் வைத்து பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு
மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லப்பட முயற்சிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வவுனியா மாநகரசபைக்கு பொதுமக்களால் முறைப்பாடு
வழங்கப்பட்டுள்ளது.
இறைச்சி பறிமுதல்
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மாநகரசபையின் பிரதி முதல்வர்
ப.கார்த்தீபன் மற்றும் சபை உறுப்பினர் அருணன் மற்றும் சுகாதார பரிசோதகர்
ஆகியோர் குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தியதுடன் இறைச்சியினை பறிமுதல்
செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட இறைச்சியின் நிறை சுமார் 558 கிலோகிராம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இறைச்சி சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில் எடை பார்க்கப்பட்டு
மாநகரசபையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை கொண்டு வந்த நபர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் இருவர் உள்ளடங்கிய மூவர்
மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வவுனியா மாநகரசபை தெரிவித்துள்ளது.

